சசிகலா மகிழ்ச்சி: பெங்களூர் சிறை அப்டேட்

வியாழன், 16 பிப்ரவரி 2017 (15:19 IST)
தமிழகத்தில் நிலவி வந்த பெரும் குழப்பத்தை ஆளுநர் ஒரு வழியாக இன்று முடிவுக்கு கொண்டு வந்துவிட்டார். அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆட்சியமைக்க அழைப்பு விடுத்துள்ளார்.  அதிமுகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக சசிகலா அணி, ஓபிஎஸ் அணி உருவாகியது. இதனால் கடும் போட்டி நிலவியது. சசிகலா சிறைக்கு செல்லவும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக சசி அணியால் அறிவிக்கப்பட்டார்.
 

 

எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்தை எடப்பாடி பழனிச்சாமி கொடுத்து ஆட்சியமைக்க உரிமை கோரியும் ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்காமல் தொடர்ந்து காலம் தாமதித்து வந்தார்.

இந்நிலையில் இன்று ஆளுநரை சந்திக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு நேரம் ஒதுக்கப்பட்டு ஆளுநரை சந்தித்தார் அவர். அவருடன் மூத்த அமைச்சர்கள் அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் சென்றனர்.

இந்த சந்திப்புக்கு பின்னர் ஆளுநர் எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்து அவரது எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்தை ஏற்றுக்கொண்டார். இன்று மாலை அவர் முதல்வராக பதவியேற்க உள்ளார்.

இந்த தகவலை வழக்கறிஞர் செந்தில் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவிடம் கூறினார். இதனைக் கேட்ட சசிகலா மிகுந்த மகிழ்ச்சி அடைந்தாராம்.அடுத்த நடவடிக்கைகள் குறித்து வழக்கறிஞரிடம் சசிகலா ஆலோசனை நடத்தினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்