ஆகஸ்ட் முதல் மாணவர்களுக்கும் ரூ.1000 உதவித்தொகை! – தமிழ்ப்புதல்வன் திட்டத்தை அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Prasanth Karthick

வெள்ளி, 14 ஜூன் 2024 (11:38 IST)
வரும் ஆகஸ்டு மாதம் முதல் உயர்கல்வி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம் தொடங்க உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. மகளிர்க்கு இலவச பேருந்து, வீட்டு பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் உரிமைத்தொகை திட்டம், அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி செல்லும் பெண்களுக்கு உதவித்தொகை என பல திட்டங்களை வழங்கியது.

இதில் அடுத்தப்படியாக மாணவிகளுக்கு வழங்கப்படுவதை போல மாணவர்களுக்கும் உதவித்தொகை வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் அரசுப் பள்ளிகளில் படித்து முடித்து உயர்கல்வி பயின்று வரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. சமீபத்தில் மக்களவை தேர்தல் நடந்ததால், தேர்தல் நடத்தைகளின்படி புதிய திட்டங்களை அமல்படுத்த முடியாத நிலை இருந்தது.

தற்போது தேர்தல் முடிந்துவிட்ட நிலையில் தமிழ்ப்புதல்வன் திட்டம் ஆகஸ்டு மாதமே தொடங்க உள்ளதாகவும், இதன்மூலம் தகுதிவாய்ந்த மாணவர்கள் பயன்பெறுவர் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கலைஞர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு உதவித்தொகை வழங்கப்பட்டது போல இந்த திட்டத்திற்கும் விண்ணப்பங்கள் நிரப்பப்பட்டு, சரிபார்க்க வேண்டிய பணிகள் இருக்கும் என கூறப்படுகிறது. விரைவில் இந்த திட்டம் குறித்த முழுமையான விவரங்கள் அரசு தரப்பில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்