ராம்குமார் உடல் இன்று தகனம் : போலீசார் குவிப்பு

ஞாயிறு, 2 அக்டோபர் 2016 (11:54 IST)
சுவாதி கொலை வழக்கில் கைதாகி சிறையில் மர்மமான முறையில் இறந்த ராம்குமாரின் உடல் இன்று அவரது சொந்த ஊரில் தகனம் செய்யப்படுகிறது.


 

 
கடந்த ஜூன் மாதம் 24ம் தேதி, சென்னையை சேர்ந்த பெண் என்ஜினியர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர் ராம்குமார். அதன்பின் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்ட்டார்.
 
அவர்தான் குற்றவாளி என்று போலீசார் தரப்பும், உண்மையான குற்றவாளியை மறைக்க போலீசார் நாடகமாடுகின்றனர் என்று ராம்குமாரின் தந்தை, அவரது வழக்கறிஞர் ராம்ராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து கூறி வந்தனர். 
 
இந்நிலையில் கடந்த செப்டம்பர் 18ம் தேதி மாலை 4.30 மணியளவில், சிறையில் இருந்த மின்கம்பியை கடித்து ராம்குமார் தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இதை ஏற்க மறுத்த அவரின் பெற்றோர்கள் மற்றும் வழக்கறிஞர் ராம்ராஜ் ஆகியோர், அவரது உடலை பிரேதபரிசோதனை செய்யும் குழுவில், தங்கள் சார்பாக ஒரு தனியார் மருத்துவர் இடம் பெற வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
 
இதனால் மரணம் அடைந்து 15 நாட்கள் ஆகியும் ராம்குமாரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படாமல் சென்னை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. 
 
ஆனால், ராம்குமாருடைய தந்தையின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம், எய்ம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த ஒரு மருத்துவரை நியமித்தது. அவரோடு சேர்ந்து மொத்தம் 5 மருத்துவர்கள் நேற்று அவரின் உடலை பிரேத பரிசோதனை செய்தார்கள். அதன்பின் ராம்குமாரின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.


 

 
அவரின் உடலுக்கு சில அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் அஞ்சலி செலுத்தினர். அதன்பின், அவரது உடல் அவரின் சொந்த ஊரான மீனாட்சிபுரத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது.
 
ஊர் மக்கள் அஞ்சலி செலுத்திய பின், அவரது உடல் இன்று தகனம் செய்யப்படுகிறது. அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுப்பதற்காக, அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்