ரஜினியா? விஜய்யா? கொலை வரை சென்ற வாக்குவாதம்!

வெள்ளி, 24 ஏப்ரல் 2020 (09:05 IST)
ரஜினியா? விஜய்யா? கொலை வரை சென்ற வாக்குவாதம்!
கொரோனா காலத்தில் கொத்துக்கொத்தாக உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் அஜித் விஜய் ரசிகர்கள் கொரோனாவுக்கு அதிக நிதி கொடுத்தது அஜித்தா? விஜய்யா? என சமூக வலைதளங்களில் சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் கொரோனாவுக்கு அதிக நிதி கொடுத்தது விஜய்யா? ரஜினியா? என்ற வாக்குவாதம் இரண்டு இளைஞர்களுக்கு இடையே முற்றி கொலையில் முடிந்த சம்பவம் விழுப்புரம் அருகே நடந்துள்ளது.
 
விழுப்புரம் அருகே மரக்காணம், சந்திக்காப்பான் கோயில் தெருவை தினேஷ் பாபு மற்றும் யுவராஜ் ஆகிய இருவரும் பக்கத்து பக்கத்து வீட்டிலிருக்கும் நண்பர்கள். இவர்கள் இருவரும் சமீபத்தில் மது அருந்திய நிலையில் இருவருக்கும் இடையே கொரோனாவுக்கு அதிக நிதி கொடுத்தது ரஜினியா? விஜய்யா? என்ற வாக்குவாதம் எழுந்தது.
 
விஜய்யின் தீவிர ரசிகரான யுவராஜூம், ரஜினியின் தீவிர ரசிகரான தினேஷ்பாபுவும் போதையில் ஒருவரை ஒருவர் வாக்குவாதம் செய்ய, ஒரு கட்டத்தில் அந்த வாக்குவாதம் முற்றி இறுதியில் யுவராஜை, தினேஷ் பாபு கொலை செய்துவிட்டார்
 
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து யுவராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின் தினேஷ் பாபுவை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். கொரோனாவுக்கு அதிக நிதி கொடுத்தது ரஜினியா? விஜய்யா? என்ற வாக்குவாதம் முற்றி கொலையில் முடிந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்