பாபநாசம் ஸ்டைலில் கொன்று புதைத்த கணவன்! 9 ஆண்டுகள் கழித்து அம்பலம்!

வியாழன், 24 நவம்பர் 2022 (12:23 IST)
புதுச்சேரியில் மனைவியை கொன்று புதைத்து விட்டு நாடகமாடிய கணவரின் குட்டு 9 ஆண்டுகள் கழித்து அம்பலமாகியுள்ளது.

புதுச்சேரி முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர். பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடியான பாஸ்கரை ஒரு கொலை வழக்கில் போலீஸார் 2009ம் ஆண்டு கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன்பின் 2013ம் ஆண்டு வாக்கில் பாஸ்கரின் மனைவி எழிலரசி மாயமாகிவிட்டார்.

எழிலரசியின் உறவினர்கள் புகார் அளித்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீஸார் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் அந்த புகார் நிலுவையில் இருந்து வந்தது. அதற்கு பின் 2016ம் ஆண்டில் பாஸ்கர் விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் சமீபத்தில் பாஸ்கரும் அவனது கூட்டாளிகளும் உழந்தை ஏரி கரை பகுதியில் இருந்து சில எலும்பு துண்டுகளை அப்புறப்படுத்தியதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் பாஸ்கரை பிடித்து விசாரித்ததில் அதிர்ச்சிக்குரிய உண்மை அம்பலமாகியுள்ளது.

ALSO READ: தென்காசி எம்எல்ஏ பழனி நாடாரின் வாகனம் மோதி நான்கு வயது சிறுவன் பலி!

2009ல் சிறைக்கு சென்ற பாஸ்கர் இடையே 2013ல் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அப்போது அவரது மனைவி எழிலரசியின் நடத்தையில் அவருக்கு சந்தேகம் இருந்துள்ளது. இதனால் எழிலரசியை திட்டம்போட்டு ஏரிக்கரைக்கு அழைத்து சென்ற பாஸ்கர் அங்கு அவரை கழுத்தை நெறித்து கொன்று தனது நண்பர்கள் உதவியுடன் அங்கேயே புதைத்துள்ளார்.

கடந்த 9 ஆண்டுகளாக இந்த விஷயம் யாருக்குமே தெரியாத நிலையில் அந்த இடத்தில்தான் பாஸ்கர் அடிக்கடி மது அருந்தியும் வந்துள்ளார். சமீபத்தில் ஏரியை பலப்படுத்துவதற்கான பணிகள் நடந்து குழிகள் தோண்டப்பட்டு வந்தது.

குழி தோண்டும்போது எழிலரசியின் எலும்புக்கூடு கிடைக்காமல் இருக்க வேண்டும் என்பதால் அந்த இடத்திலிருந்து தனது நண்பர்களோடு சேர்ந்து தோண்டி எலும்பு கூடுகளை அப்புறப்படுத்த முயன்றபோதுதான் பாஸ்கரன் பிடிப்பட்டுள்ளார். திரைப்படத்தை மிஞ்சும் அளவில் கட்டிய மனைவியையே கொன்று புதைத்து மாயமானதாக நாடகம் ஆடிய பாஸ்கரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit By Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்