சினிமா டிக்கெட் ஊழலை கமல்ஹாசன் தட்டிக் கேட்பாரா? - பொள்ளாச்சி ஜெயராமன்

திங்கள், 24 ஜூலை 2017 (13:18 IST)
சினிமா திரையரங்கில் வெளிப்படையாக நடைபெறும் ஊழலை நடிகர் கமல்ஹாசன் தட்டிக் கேட்பாரா என சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.


 

 
தமிழக அரசின் எல்லா துறைகளிலும் ஊழல் தலை விரித்தாடுகிறது என நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் உட்பட பல அமைச்சர்கள் கமல்ஹாசனுக்கு எதிராக கடுமையாக கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல், கமல்ஹாசன் அரசியலுக்கு வர வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், இதுபற்றி நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன் “ஊழலை பற்றி பேசும் கமல்ஹாசன், திரையரங்க கட்டணத்தில் நடைபெறும் ஊழல் பற்றியும் பேச வேண்டும். திரையில் அதிக விலைக்கு டிக்கெட் விற்கப்படுவதை அவர் அறிவாரா? கமல்ஹாசன் நடித்த புதிய படம் வெளியாகும் போது, திரையரங்குகளில் டிக்கெட் விலை, அரசு நிர்ணயித்த விலைக்குதான் விற்கப்படும் என அறிவிக்க தயாராக இருக்கிறாரா?” என அவர் கேள்வி எழுப்பினார்.
 
மேலும், அவர் அப்படி அறிவித்தால் அவரின் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்கிறோம். இனிமேல் திரையரங்கில் அதிக விலைக்கு டிக்கெட் விற்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்