கட்சியும் ஆட்சியும் எங்களிடம்தான் உள்ளன: எடப்பாடி பழனிச்சாமி கொக்கரிப்பு!

வியாழன், 10 ஆகஸ்ட் 2017 (09:53 IST)
தற்போது நடைபெற்று வரும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசை கைப்பற்ற எதிர்க்கட்சியும், மற்ற கட்சியினரும் முயற்சிக்கிறார்களோ இல்லையோ அதிமுகவில் உள்ள அணியினர் கண்டிப்பாக முயற்சிக்கிறார்கள்.


 
 
ஓவ்வொரு அணியினரும் பேட்டியளிக்கும் போது மறக்காமல் சொல்லக்கூடிய வார்த்தை கட்சியும் ஆட்சியும் எங்களிடம்தான் உள்ளது. ஓபிஎஸ் அணியினர் ஒரு பக்கம், தினகரன் அணியினர் ஒரு பக்கம், இந்த இரண்டு அணியினரின் அழுத்தத்தின் மத்தியில் ஆட்சியை நடத்தி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி.
 
பொதுவாக எடப்பாடி அணியில் உள்ள மற்ற அமைச்சர்கள் தான் கட்சியும் ஆட்சியும் எங்களிடம்தான் உள்ளது என்பார்கள். இந்த முறை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியே விழுப்புரத்தில் கட்சியும், ஆட்சியும் எங்களிடம்தான் உள்ளது என கொக்கரித்துள்ளார்.
 
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று விழுப்பரத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் செங்கோட்டையன், சி.வி.சண்முகம், ஜெயக்குமார், தங்கமணி, ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 
இதில் கலந்து கொண்டு பேசிய பின்னர் முதல்வர் பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது டெங்கு காய்ச்சலைச் சமாளிக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என கூறிய எடப்பாடி பழனிச்சாமி கட்சியும் ஆட்சியும் எங்களிடம்தான் உள்ளன. அதை மக்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்றார்.
 
மேலும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருப்பது அவர்களது ஜனநாயக உரிமை தற்போது தமிழகத்தில் ஆட்சியைக் கவிழ்க்க சூழ்ச்சி நடைபெறுகிறது. அதை நாங்கள் முறியடித்து வருகிறோம். தொண்டர்கள் ஒரே அணியில் இருந்து எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்