இந்த ஆண்டும் பாடங்கள் குறைப்பா? – பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!

செவ்வாய், 14 ஜூன் 2022 (10:54 IST)
தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டும் பள்ளி பாடங்கள் குறைக்கப்படுமா என்ற கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை பதில் அளித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் முழுமையாக நடைபெறாமல் இருந்தது. கடந்த கல்வி ஆண்டில் பள்ளிகள் திறக்கப்பட்ட போதிலும் இடையே கொரோனா காரணமாக சில காலம் பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டதால் மாணவர்கள் நலன் கருதி பாடத்திட்டத்திலிருந்து சில பாடங்கள் குறைக்கப்பட்டன.

இந்நிலையில் இந்த கல்வி ஆண்டு திட்டமிட்டது போல 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேற்று முதலாக பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு குறைக்கப்பட்டது போல இந்த ஆண்டும் பாடத்திட்டங்கள் குறைக்கப்படுமா என்ற கேள்வி இருந்து வந்தது.

இந்நிலையில் தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ள பள்ளிக்கல்வித்துறை, இந்த கல்வி ஆண்டில் 1 முதல் 12 வகுப்புகள் வரை அனைவருக்கும் 100 சதவீதம் அனைத்து பாடங்களும் நடத்தப்படும். இந்த கல்வி ஆண்டு முழுமையான கல்வி ஆண்டாக செயல்படும் என்பதால் பாடத்திட்டங்கள் குறைக்கப்படாது எனவும் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்