பாரிவேந்தருக்கு நிபந்தனை ஜாமீன்: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு!

வியாழன், 8 செப்டம்பர் 2016 (19:51 IST)
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பில் இடம் வாங்கித் தருவதாக, வேந்தர் மூவிஸ் மதன் 111 பேரிடம் ரூ.75 மோசடி செய்து விட்டு தலைமறைமாகிவிட்டதால், எஸ்.ஆர்.எம். குழும தலைவர் பச்சமுத்துவை காவல்துறையினர் கடந்த மாதம் கைது செய்தனர்.


 
இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், பச்சமுத்து தாக்கல் செய்த ஜாமீன் மனு கடந்த வாரம் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னை மாவட்ட செசன்சு நீதிமன்றத்தில், ஜாமீன் கேட்டு பச்சமுத்து சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, மனுவுக்கு காவல்துறையினரின் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

அதன்படி இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது, வழக்கை விசாரித்த நீதிபதி, பச்சமுத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார். மேலும், பச்சமுத்து சைதாப்பேட்டை 11 வது நீதிமன்றத்தில் ரூ.75 கோடி செலுத்த வேண்டும் என்றும், தினமும் காலை 10.30 மணிக்கு விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி அவர் கையெழுத்திட வேண்டும் என்றும், அவரின் பாஸ்போர்டை விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும்,  நீதிபதி கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்