தீபாவை வாபஸ் பெற வைக்க ஓபிஎஸ் தரப்பு தீவிரம்: போட்டியிலிருந்து விலகுவாரா?

திங்கள், 27 மார்ச் 2017 (11:16 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவை அடுத்து அவரது ஆர்கே நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக 127 பேர் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு அதில் 82 பேரின் வேட்புமனுக்கள் தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டன.


 
 
இந்நிலையில் வேட்புமனுக்களை தாக்கல் செய்தவர்கள் தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாளாகும். இன்று மாலை 5 மணிக்கு இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும்.
 
இந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் மருதுகணேஷ், அதிமுகவின் இரு அணிகள் சார்பாக போட்டியிடும் டிடிவி தினகரன், மதுசூதனன் மற்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஆகியோர் முக்கியமான வேட்பாளர்களாக பார்க்கப்படுகிறார்கள்.
 
இதில் சசிகலா அணியின் எதிர்ப்பு ஓட்டுகள் ஓபிஎஸ் அணிக்கு முழுமையாக செல்லாமல் அது தீபாவுக்கும் பிரிந்து செல்லும் வாய்ப்பு உள்ளதால் இன்று அவரை தேர்தலில் இருந்து வாபஸ் பெற வைக்க ஓபிஎஸ் அணியினர் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.
 
எதிர்ப்பு ஓட்டுகளை சிதற விடாமல் ஓபிஎஸ் அணியின் மதுசூதனனை வெற்றி பெற வைக்க அந்த அணியினர் தீவிரமாக உள்ளனர். தீபாவல் தங்கள் வெற்றி வாய்ப்பு பறிபோய் விடக்கூடாது என்பதால் அவரை வாபஸ் பெற வைக்க ஓபிஎஸ் அணியினர் முயற்சி செய்து வருகின்றனர். இதனை தனியார் தொலைகாட்சி பேட்டி ஒன்றில் மாஃபா பாண்டியராஜனும் உறுதி செய்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்