ஜெயலலிதா சமாதியில் குவியும் ஓபிஎஸ் அணியினர்: மெரினாவில் பரபரப்பு!

வியாழன், 23 மார்ச் 2017 (08:57 IST)
அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலை சின்னம் நேற்று இரவு தற்காலிகமாக முடக்கப்பட்டது. இதனையடுத்து ஆர்.கே.நகரில் போட்டியிட உள்ள அதிமுகவின் இரு அணியினரும் இரட்டை இலை அல்லாத வேறு வேறு சின்னத்தில் போட்டியிட உள்ளனர்.


 
 
ஜெயலலிதா மறைவையடுத்து அதிமுக சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டு அணியாக பிரிந்தது. ஆர்கே நகர் தொகுதியில் இரு அணியினரும் வேட்பாளர்களை அறிவித்து இரட்டை இலை சின்னத்தை கேட்டு தேர்தல் ஆணையத்தை அனுகியது. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய இன்று தான் கடைசி நாள் என்பதால் நேற்று இரட்டை இலை தொடர்பான இறுதி விசாரணை தேர்தல் ஆணையத்தில் நடைபெற்றது.
 
இதில் நேற்று இரவு தற்காலிகமாக இரட்டை இலை சின்னம் தற்காலிகமாக முடக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில் இரு அணியினரும் வேறு சின்னத்தில் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். ஓபிஎஸ் அணி சார்பில் போட்டியிட உள்ள மதுசூதனன் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார்.
 
இதனையடுத்து இரட்டை இலை சின்னம் இல்லாத நிலையில் ஓபிஎஸ் அணியின் மைத்ரேயன், பொன்னையன், மனோஜ் பாண்டியன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட பலரும் மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு வந்துள்ளனர். மேலும் பல முக்கிய நிர்வாகிகளும் மெரினா நோக்கி வந்தவாறு உள்ளனர்.
 
இவர்கள் ஜெயலலிதா சமாதிக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திவிட்டு பின்னர் அங்கிருந்து நேராக மதுசூதனன் தலைமையில் ஆர்கே நகரில் வேட்புமனு தாக்கல் செய்ய செல்வார்கள் என கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்