கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டம்.. 18 லட்சமும் அம்பேல்! – விரக்தியில் ரயில் முன் பாய்ந்த இளைஞர்!

Prasanth Karthick

வெள்ளி, 5 ஏப்ரல் 2024 (13:37 IST)
கள்ளக்குறிச்சியில் ஆன்லைன் கேமிங் மோகம் காரணமாக 18 லட்சத்தை இழந்தவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் பலியான நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்ற குரல்கள் எழுந்தது. இதுதொடர்பாக சட்டமன்றத்திலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும் மக்கள் பலர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழப்பதும், தற்கொலை உள்ளிட்ட மோசமான முடிவுகளை எடுப்பதும் தொடர்கதையாக உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வண்டி பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் ஜெயராமன். இவர் ஐதராபாத்தில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். சமீபமாக ஆன்லைன் சூதாட்ட பழக்கத்திற்கு அடிமையான ஜெயராமன் நிறைய பணத்தை அதில் இழந்துள்ளார். மேலும் நண்பர்கள், தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி பணத்தை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்துள்ளார்.

இதனால் பணம் கொடுத்தவர்கள் ஜெயராமனை மிரட்டத் தொடங்கிய நிலையில் இதுகுறித்து தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். அவரும் வீட்டை அடமானம் வைத்து கடன் பணத்தை தருவதாக தெரிவித்துள்ளார்.

ALSO READ: அனல் பறக்கும் தேர்தல்.! அதிகாரிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு..!

ஐதராபாத்திலிருந்து சொந்த ஊருக்கு வந்தும் தீராத மனவிரக்தியில் இருந்த ஜெயராமன் நேற்று இரவு தனது அண்ணனுக்கு போன் செய்து தான் தற்கொலை செய்து கொள்வதாக சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்துள்ளார். பின்னர் அவ்வழியாக சென்ற திருச்சி – சென்னை வந்தே பாரத் ரயிலின் குறுக்கே பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் ஜெயராமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்