பாமக கட்சியில் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையே மோதல் தொடர்ந்து வந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் எடுத்துள்ள முடிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி தேர்தல் பணிகளுக்கான ஆயத்தமாக மகாபலிபுரத்தில் பாமக மாநாட்டை நடத்தியது. அதற்கு முன்பிருந்தே கட்சி நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சியின் தலைவருமான அன்புமணிக்கும் இடையே முட்டல் மோதல் தொடர்ந்து வந்தது.
மாநாட்டிற்கு பிறகு இந்த முரண்பாடு அதிகரித்த நிலையில் சமீபத்தில் ராமதாஸ் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நேரடியாகவே அன்புமணி மற்றும் அவரது மனைவி சௌமியாவை தாக்கி பேசி வருகிறார். மேலும் அன்புமணி தலைவர் பதவிக்காக தன்னிடம் சண்டை போடுவதாக பேசியிருந்தார்.
அதை தொடர்ந்து இருவருக்கும் இடையே சமாதானம் செய்யும் முயற்சியையும் பாமக குழுவினர் மேற்கொண்ட நிலையில் அது தோல்வியில் முடிந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் தற்போது செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் “2026 தேர்தலுக்குப் பிறகு தலைவர் பொறுப்பை அன்புமணிக்கு கொடுத்துவிடலாம் என நினைத்தேன். ஆனால், அவரது செயல்பாடுகளை பார்க்கும் போது, என் மூச்சு அடங்கும் வரை தலைவராக தொடர்வேன்” என்று கறாராக பேசியுள்ளார்.
Edit by Prasanth.K