சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல்.! கோவை நீதிமன்றம் அனுமதி..!

Senthil Velan

திங்கள், 13 மே 2024 (16:02 IST)
சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸாருக்கு அனுமதி அளித்து கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
 
பெண் காவல் துறையினரையும், காவல்துறை உயர் அதிகாரிகளையும் அவதூறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கரை, தேனியில் வைத்து கோவை சைபர் கிரைம் போலீஸார் கடந்த 5ம் தேதி கைது செய்தனர். கோவை மாநகர சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் சுகன்யா கொடுத்த புகாரில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

பின்னர் அவர் மீது கோவை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல திருச்சி, சென்னை உள்ளிட்ட காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளிலும் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது.
 
அவரை கைது செய்து அழைத்து வரும்போது, போலீஸ் வாகனம் விபத்திற்குள்ளானதில் சவுக்கு சங்கரின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்ததாகவும், கோவை மத்திய சிறை தான் உனக்கு சமாதி என மிரட்டுவதாகவும் சவுக்கு சங்கர் குற்றம் சாட்டியுள்ளார்.
 
இந்நிலையில் கோவை சைபர் கிரைம் காவல் துறையினர் சவுக்கு சங்கரை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று கோவை நான்காவது நடுவர் நீதிமன்ற நீதிபதி சரவணபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

ALSO READ: நீட் தேர்வு வினாத்தாளை லீக் செய்ய ரூ.50 லட்சம்.! மாணவர்களிடம் இடைத்தரகர்கள் வசூல்..!!

அப்போது சவுக்கு சங்கரை ஒரு நாள் மட்டும் கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி சரவண பாபு அனுமதி வழங்கினார். விசாரணைக்கு பின்னர் நாளை மாலை 5 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் சவுக்கு சங்கரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்