”தலைவி” படம் கற்பனை என அறிவிக்க வேண்டும்.. உத்தரவிட்ட நீதிமன்றம்

Arun Prasath

வியாழன், 12 டிசம்பர் 2019 (16:43 IST)
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று திரைப்படமான “தலைவி”க்கும்,இணையத்தளத் தொடரான ”குயின்”-க்கும் நீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு “தலைவி” திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்தில் ஜெயலலிதா கதாப்பாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடிக்கிறார். இந்த திரைப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.

அதே போல் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து ”குயின்” என்ற இணையத்தள தொடர் விரைவில் வெளிவரவுள்ளது. இதில் ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார்.

இதனிடையே தலைவி திரைப்படத்திற்கும் குயின் தொடருக்கும் தடை கோரி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதன் விசாரணை கடந்த 9 ஆம் தேதி நடைபெற்றது. அப்போது வழக்கு ஆணவங்களை கௌதம் வாசுதேவ் மேனன் தரப்புக்கு உடனடியாக கொடுக்க தீபா தரப்புக்கு உத்தரவிட்டது. மேலும் கௌதம் மேனன் தரப்பினருக்கும் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், தலைவி மற்றும் குயின் ஆகிய இரண்டுக்கும் தடை விதிக்க நீதிமன்றம் மறுத்தது. மேலும் தீபா கதாப்பாத்திரம் குயின் இணையத்தளத்தில் இடம்பெறவில்லை என்ற கௌதமின் வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

இதன் பிறகு முன்னதாக வெளிவந்த ஒரு புத்தகத்தை தழுவியே தலைவி படம் எடுக்கப்பட்டதாகவும் ஏ.எல்விஜய் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதன் பிறகு நீதிமன்றம் தலைவி, குயின் ஆகிய இரண்டுக்கும் தடை விதிக்க மறுத்தது. மேலும் தலைவி திரைப்படம் கற்பனையானது என அறிவிப்பு வெளியிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்