வீரன்..தின்னியன்..தின்தோள் மறவன்.. - தினகரனை புகழ்ந்து பல்பு வாங்கிய நாஞ்சில் சம்பத்

வெள்ளி, 10 மார்ச் 2017 (14:22 IST)
அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டி.டிவி.தினகரனைப் புகழ்ந்து, பாராட்டுப் பத்திரம் வாசித்த நாஞ்சில் சம்பத்தை, சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் ஏகத்துக்கும் கிண்டல் அடித்து வருகின்றனர்.


 

 
நாஞ்சில் சம்பத் என்ன பேசினாலும் அது செய்திதான். இவர் இன்று காலை தனது பேஸ்புக் பக்கத்தில் தினகரனை புகழ்ந்து தள்ளியிருந்தார். அதில் அவர் கூறியதாவது:
 
திராவிட இயக்கத்தின் திருப்பத்திற்கும், விருப்பத்திற்கும் உரிய வரலாற்று சிறப்பு மிகுந்த மயிலை மாங்கொல்லையில் கழகத்தின் துணை பொதுச்செயலாளர் நேற்று ஆற்றிய உரை கழக தோழர்களுக்கும் அம்மாவின் பக்தர்களுக்கும் களிப்பையும் கரைகாணா உற்சாகத்தையும் தந்து விட்டது. 
 
மதிப்பிற்குரிய டிடிவி தினகரன் அவர்கள் வீரன், தின்னியன், தின்தோள் மறவன் என்பதை நிரூபித்து விட்டார். எங்கள் திசைகளில் அவர் தேன் சொரிவார் என்ற மகத்தான நம்பிக்கையை மாங்கொல்லை பேச்சு எங்களுக்கு தந்து விட்டது. எங்களுக்கு தித்திப்பையும் எதிரிகளுக்கு திகிலையும் தந்த இந்த பேச்சு அம்மாவின் மரணத்தின் பின்னால் மறைந்து நின்று அரசியல் செய்கின்ற பாவி பன்னீரின் வேரில் வெந்நீரை ஊற்றி விட்டது.
 
அதிமுகவின் அசைக்க முடியாத ஆஸ்பெட்டாஸ் கோட்டையான இராதாகிருஷ்ணன் நகரில் இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட யுத்த நாளில், எதிரிகளின் அறைகூவல்களுக்கு முகம் கொடுக்கும் வகையில் அவருடைய பேச்சு முத்திரை பதித்து விட்டது. 
 
ஆயிரக்கணக்கான நலிந்த மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி நேற்று தன் பயணத்தை தொடங்கி இருக்கிற கழக துணைப் பொதுச்செயலாளர் வாகைப்பூக்களை வாரித்தருவார், வரலாறு படைப்பார். இதை காலம் சொல்லும்” என அவர் குறிப்பிட்டுருந்தார்.
 
அதை படித்த ஏராளமானோர் அவருக்கு எதிராக கருத்து தெரிவித்து, அவரை கழுவி ஊற்ற தொடங்கி விட்டனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்