மக்களின் குறைகள் 30 நாட்களில் தீர்க்கப்படும்! – ’மக்களுடன் முதல்வர்’ திட்டம் இன்று தொடக்கம்!

திங்கள், 18 டிசம்பர் 2023 (10:00 IST)
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்து 2 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில் தற்போது மக்கள் குறைகளை தீர்க்க ‘மக்களுடன் முதல்வர்’ என்ற திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.



தமிழகத்தில் கடந்த 2021ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தேர்தலுக்கு முன்னதாக மக்கள் தங்கள் குறைகள், கோரிக்கைகளை அளிக்க ஏற்பாடு செய்து ஏராளமான மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது ஆட்சியமைத்த 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என சொல்லப்பட்டிருந்தது.

தற்போது திமுக ஆட்சி அமைத்து 2 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இன்று “மக்களுடன் முதல்வர்” என்ற திட்டத்தை கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்தில் தொகுதி, வார்டு வாரியாக பல இடங்களில் மக்கள் குறைதீர் கூட்டங்கள் நடைபெற உள்ளன.

பொதுமக்கள் அதிகமாக அணுகும் வருவாய் துறை, நகராட்சி நிர்வாகத்துறை, ஆதி திராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை என பல துறை சார் கோரிக்கைகளை அப்போதே பெற்று அடுத்த 30 நாட்களுக்குள் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக இன்று (டிசம்பர் 18) முதல் ஜனவரி 6 வரை அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகர்புறங்களை ஒட்டிய கிராம ஊராட்சிகள் என 1,745 இடங்களில் இந்த “மக்களுடன் முதல்வர்” குறைதீர் முகாம்கள் நடைபெறுகின்றது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்