இதுக்கு எதுக்கு அனைத்து கட்சி கூட்டம்? ஸ்டாலின் மீது ஜெயக்குமார் பாய்ச்சல்

சனி, 18 ஏப்ரல் 2020 (11:37 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் செய்தியாளர் சந்திப்பை மு.க.ஸ்டாலின் விமர்சித்ததற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்.

தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர் “கொரோனாவால் தமிழகத்தில் ஏழை மக்கள் பாதிக்கப்படவில்லை. பெரும்பாலும் வசதியானவர்களே கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்” என்று கூறியிருந்தார்.

முதல்வரின் இந்த கருத்து குறித்து விமர்சித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ”அரிய வர்க்க பேத கண்டுபிடிப்பை வெளியிட்டு நகைச்சுவை பரிமாறுவதை நிறுத்திவிட்டு கொரோனாவை தடுக்க முயற்சியுங்கள். அரசியல் சுயநலத்திற்காகவும், லாபத்திற்காகவும் மக்கள் உயிரோடு விளையாடாதீர்கள்” என கூறினார்.

இந்நிலையில் மு.க.ஸ்டாலின் கருத்து குறித்து பேசியுள்ள அமைச்சர் ஜெயக்குமார் ”நதிநீர் பங்கீடு உள்ளிட்ட மக்களின் பொது பிரச்சினைகளுக்குதான் அனைத்து கட்சி கூட்டம் அவசியம். இதுபோன்ற மருத்துவ பேரிடர் சமயத்தில் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையே அவசியம். இது தெரியாமல் ஸ்டாலின் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தியது மட்டுமல்லாமல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழக அரசை குறை கூறி வருகிறார். இதனால் மக்கள் மத்தியில் அவர் ஒரு கேலிக்கூத்தாக மாறி விடுவார்” என பதிலடியாக கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்