கமல் ஒழுக்கமில்லாதவர்; எந்த அருகதையும் அற்றவர்: அமைச்சர் ஆவேசம்!

புதன், 16 ஆகஸ்ட் 2017 (10:31 IST)
நடிகர் கமல்ஹாசனுக்கும் ஆளும் அதிமுகவுக்கும் எதிரான மோதல் நீடித்து வருகிறது. அரசுக்கு எதிராக விமர்சித்து வரும் கமல்ஹாசனை அமைச்சர்கள் தனிப்பட்ட ரீதியாக கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கமலின் ஒழுக்கம் குறித்து பேசியுள்ளார்.


 
 
இதுவரை அரசுகுறித்து கருத்து தெரிவித்து வந்த நடிகர் கமல் எடப்பாடி பழனிச்சாமி குறித்து நேரடியாக கருத்து தெரிவித்தார். ஒரு மாநிலத்தில் போதுமான ஊழல் மற்றும் துயர சம்பவங்கள் நடைபெற்றால், அதற்கு பொறுப்பேற்று ஒரு முதல்வர் அதற்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும். அவரை ராஜினாமா செய்ய வேண்டும் என ஏன் எந்த கட்சியும் வலியுறுத்தவில்லை? என கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருந்தார்.
 
இதற்கு பதில் அளித்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நடிகர் கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்துள்ளார். கமல்ஹாசன் தனிமனித வாழ்க்கையில் ஒழுக்கமில்லாதவர். அவர் ஆட்சியை பற்றி சொல்வதற்கு எந்த அருகதையும் அற்றவர் என ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
 
மேலும், கமல் தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ள சிங்கத்துடன் மோதுகிறார். ஜெயலலிதாவின் மரணத்தின் போது கூட ஒழுங்காக அறிக்கை வெளியிடாமல் கிண்டலாக அறிக்கை வெளியிட்டிருந்தார். அவரை அதிமுகவினர் கவனித்துக்கொண்டு தான் வருகின்றனர்.
 
எந்த குறையும் இல்லாமல் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்து வரும் ஆட்சியை கேலியும் கிண்டலுமாக கலம் பேசுவது கண்டிக்கத்தக்கது என ராஜேந்திரா பாலாஜி பேசியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்