வாசனுக்கு எம்.பி சீட்; பாஜக தலையீடா? ஜெயகுமார் பதில்!

செவ்வாய், 10 மார்ச் 2020 (12:01 IST)
ஜி.கே.வாசனுக்கு எம்பி சீட் வழங்குவதில் பாஜகவின் தலையீடு இருந்ததா என அமைச்சர் ஜெயகுமார் பதிலளித்துள்ளார். 
 
ராஜ்யசபாவில் காலியாகும் எம்.பி பதவிகளுக்கான வேட்பாளர்களை திமுக மற்றும் அதிமுக அறிவித்துள்ளது. திமுகவை பொறுத்தவரை கூட்டணி கட்சியிலிருந்து யாரும் இல்லாமல் மூவரும் திமுக உறுப்பினர்களே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதிமுகவில் இருவருக்கும், கூட்டணி கட்சியான தமாகாவில் ஜி.கே.வாசனுக்கும் சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.
 
நீண்ட நாளாக எம்.பி சீட் கேட்டு வந்த தேமுதிகவுக்கு சீட் கொடுக்காதது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் தேமுதிக - அதிமுக கூட்டணியில் விரிசல் ஏற்படலாம் என பேசிக் கொள்ளப்பட்டது. 
 
மேலும், ஜி.கே.வாசனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டதில் பாஜக தலையீடு இருந்ததாக செய்திகளும் வெளியானது. இது குறித்து பதில் அளித்துள்ளார் அமைச்சர் ஜெயகுமார். அவர் கூறியதாவது, அதிமுகவுக்கு யாரும் அழுத்தம் தர முடியாது. எங்களுக்கு யாரும் அழுத்தம் கொடுக்கும் அளவுக்கு நாங்கள் குழந்தைகள் அல்ல. நாங்கள் பாரம்பரியமிக்க கட்சி. 
 
எங்களுக்கு யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது, கழுத்தை நெரிக்க முடியாது. சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் பக்குவம் பெற்ற கட்சி அதிமுக என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்