தமிழ்நாட்டில் தீண்டாமை, சாதிய வன்கொடுமைகள் அதிகமாக உள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதை அமைச்சர் கோவி.செழியன் கண்டித்து பேசியுள்ளார்.
நேற்று அம்பேத்கர் ஜெயந்தி விழாவில் கலந்துகொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, அம்பேத்கர் சமத்துவத்திற்காக போராடியதாக பேசியபோது, தமிழ்நாட்டில் இன்னும் தொடர்ந்து தீண்டாமை, பட்டியல் சாதியினருக்கு வன்கொடுமைகள் தொடர்ந்து நடந்து வருவதாக வேங்கைவயல் விவகாரம் உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி பேசினார்.
ஆளுநரின் இந்த பேச்சை கண்டித்து திமுக மற்றும் தோழமை கட்சி பிரமுகர்கள் பேசி வருகின்றனர். இந்நிலையில் ஆளுநரின் பேச்சை கண்டித்து பேசிய திமுக அமைச்சர் கோவி செழியன் “பட்டியல் சாதியினருக்கு எதிரான குற்றங்களில் பீகார் 2வது இடத்தில் உள்ளது. ஆளுநரின் சொந்த மாநிலத்தில் இப்படி கொடுமைகள், அநீதி நடந்துக் கொண்டிருக்கும்போது தமிழ்நாட்டைப் பற்றிப் பேச ஆளுநருக்கு தகுதி இருக்கிறதா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் பீகாரில் பாஜக தயவில் ஆட்சி நடந்து வருவதால் ஆளுநர் அதை கண்டித்து பேச மாட்டார் என்றும் பேசியுள்ளார்.
Edit by Prasanth.K