இவர்களின் மரபணுக்களில் கொட்டமடிக்கும் மனநோய் அவலத்தின் உச்சமாகும்- திருமாவளவன்

வெள்ளி, 21 ஜூலை 2023 (12:49 IST)
மணிப்பூரில் இரண்டு பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக பல ஆண்களால்  வன்முறை செய்த  வீடியோ இணையத்தில் வெளியாகி பரவலானது.

நாட்டையே அதிர்ச்சியடைய செய்த இந்த சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டுள்ளது. அதேபோல், மணிப்பூர் சம்பவத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்க   அம்மாநில டிஜிபிக்கு அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், மணிப்பூர் பழங்குடியின பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய விவகாரம் தொடர்பாக 77 நாட்களுக்கு பிறகு ஹீராதாஸ் என்ற முக்கிய குற்றவாளியைக் கைது செய்து,  அவரது புகைப்படத்தையும்  போலீஸார்  நேற்று வெளியிட்டனர்.

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளன் தன் டுவிட்டர் பக்கத்தில்,

‘’இம்மண்ணில் தலித்துகளுக்கும் பழங்குடிகளுக்கும் எதிராகக் காலம் காலமாகத் தலைமுறை தலைமுறையாக இத்தகைய கேவலமான ஒடுக்குமுறைகள் தொடர்கின்றன. இந்த இழிசெயல்களைத் தங்களின் சாதிப் பெருமைகளென இவர்கள் நம்புவதுதான் இழிவினும் இழிவான பித்துக்குளித்தனமாகும். அப்பாவிகளை வதைத்துப் படுகொலை செய்வது, வாயில் மலம் திணிப்பது, சிறுநீர் கழிப்பது, குடிசைகளைக் கொளுத்துவது, உடைமைகளைச் சேதப்படுத்துவது, பெண்களை அம்மணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச்செல்வது, கூட்டுப் பாலியல் வல்லுறவு கொள்வது, கொள்ளையடிப்பது, ஆணவக் கொலைகள் செய்வது என விவரிக்க இயலாத வன்கொடுமைகளைச் செய்து அவற்றை வீரதீர செயல்களெனப் போலியாய்க் கர்வம் கொள்வதுதான் இவர்களின் மரபணுக்களில் கொட்டமடிக்கும் மனநோய் அவலத்தின் உச்சமாகும்….’’என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்