கஞ்சா அடித்த இளைஞர்களை தட்டிக் கேட்ட நபர் வெட்டிக் கொலை! – சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!

Prasanth Karthick

சனி, 9 மார்ச் 2024 (19:47 IST)
சமீப காலமாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக கூறப்படும் நிலையில் சென்னையில் கஞ்சா அடித்த இளைஞர்களை தட்டிக் கேட்ட நபர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.



சென்னை அடுத்த புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய பகுதியை சேர்ந்தவர் 47 வயதான சக்திவேல். சமீபத்தில் இவர் வசிக்கும் பகுதியில் இளைஞர்கள் சிலர் கஞ்சா பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அங்கு வந்த சக்திவேல் அந்த இளைஞர்களை கண்டித்து அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதனால் அந்த இளைஞர்கள் சக்திவேல் மீது கோபத்தில் இருந்துள்ளனர். தக்க நேரம் பார்த்து காத்திருந்த அவர்கள் சக்திவேல் டீ குடிக்க தனியாக சென்றுக் கொண்டிருந்தபோது அவரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சக்திவேலை உடனடியாக மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் சக்திவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் இந்த வழக்கில் அதே பகுதியை சேர்ந்த நவீன் (20), சிலம்பரசன் (24), அஜீத்குமார் (21), விக்கி (22) ஆகிய நான்கு பேரை கைது செய்துள்ளனர். கஞ்சா அடிப்பதை தட்டிக் கேட்ட நபர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்