சென்னை மெரினா கடற்கரை நேதாஜி சிலை அருகே 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், உயிரிழந்தவர் வெங்கடேசன் என்பதும், அவர் கடற்கரையில் வியாபாரம் செய்துவிட்டு அங்கேயே உறங்குபவர் என்பதும் தெரிய வந்தது. அருகிலுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஒரு திருநங்கை மற்றும் ஓர் இளைஞர் சேர்ந்து வெங்கடேசனை தாக்கி கொலை செய்தது வெளிச்சத்திற்கு வந்தது.
முதற்கட்ட விசாரணையில், திருநங்கை மற்றும் ராகேஷ் இருவரும் மெரினாவில் பேசிக்கொண்டிருந்தபோது, வெங்கடேசன் அந்த திருநங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இருவரும் சேர்ந்து உருட்டுக் கட்டையால் வெங்கடேசனை தாக்கியதாகவும், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவம் தொடர்பாக, திருநங்கை மற்றும் ராகேஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிகழ்வு சென்னை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.