ஈரான் முக்கிய உயர்மட்ட தளபதியை கொன்றதா இஸ்ரேல்!? அடுத்தடுத்து பரபரப்பு! - ஈரானின் பதில் என்ன?

Prasanth K

செவ்வாய், 17 ஜூன் 2025 (16:04 IST)

ஈரான் - இஸ்ரேல் இடையே போர் நடந்து வரும் நிலையில் ஈரானின் உயர்மட்ட ராணுவ தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து அப்பகுதிகளின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் முக்கிய ராணுவ தளபதிகள், விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர். அதை தொடர்ந்து ஈரான் தனது ஏவுகணைகளை இஸ்ரேலின் டெல் அவிவ் மீது ஏவி தாக்கியது.

 

இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் தாக்குதல் நடத்தியது. தற்போது இஸ்ரேலின் போர் தெஹ்ரானில் மையம் கொண்டிருப்பதாக தெரிகிறது. இதனால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தஹ்ரானில் உள்ள பொதுமக்கள் உடனடியாக அப்பகுதியிலிருந்து வெளியேறும்படி எச்சரித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்நிலையில் ஈரானின் இந்த போருக்காக சமீபமாக போர்க்கால தலைமை தளபதியாக நியமிக்கப்பட்ட அலி ஷாத்மானியை நேற்று நடந்த தாக்குதலில் கொன்றுவிட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் உயர்மட்ட ராணுவ தளபதியும், ஈரான் ஆயுதப்படை, புரட்சிக்கர காவல்படைக்கும் தளபதியாக விளங்கியவர் அலி ஷாத்மானி. மேலும் இவர் ஈரான் உச்சத்தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு நெருக்கமான நண்பர் என்றும் கூறப்படுகிறது.

 

ஆனால் அவரது உயிரிழப்பு குறித்து ஈரான் எந்த தகவலும் வெளியிடவில்லை. ஒருவேளை அவர் கொல்லப்பட்டிருந்தால் அது ஈரானுக்கு பெரும் இழப்பு என கூறப்படுகிறது. அதேசமயம் அதனால் ஈரான் மேலும் ஆக்ரோஷமாக இஸ்ரேலை தாக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்