அந்த பையன் என்ன தீவிரவாதியா? கடுமையாக தாக்கிக் கொன்றது ஏன்? - நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Prasanth K

திங்கள், 30 ஜூன் 2025 (15:19 IST)

சிவகங்கையில் காவல் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்ற நபர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் குறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது.

 

சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தை அடுத்த மடப்புரத்தில் உள்ள காளியம்மன் கோவில் ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வந்தவர் அஜித்குமார். சமீபத்தில் நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில் அஜித்குமாரை விசாரணைக்காக போலீஸார் அழைத்து சென்ற நிலையில் அவர் உடல்நல கோளாறால் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். ஆனால் காவலர்கள் தாக்கியதாலேயே அவர் மரணமடைந்ததாக அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

அதை தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக 6 காவலர்களை சஸ்பெண்ட் செய்து சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். இந்த சம்பவம் தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த வழக்கை நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்ய வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முறையிடப்பட்டுள்ளது.

 

அதை தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக கேள்வி எழுப்பிய நீதிபதிகள், காவல் நிலையங்களில் கடந்த சில ஆண்டுகளில் 24 சந்தேக மரணங்கள் ஏற்பட்டுள்ளது குறித்து தங்கள் தரப்பு பதில் என்ன என்று அரசு தரப்பு வக்கீலிடம் கேள்விகளை எழுப்பினர். மேலும். இறந்த நபர் தீவிரவாதியா? அவர் கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லப்பட்டாரா? விசாரணைக்கு அழைத்துச் சென்ற நபரை கடுமையாக தாக்கியது ஏன்? என பல கேள்விகளை கேட்டுள்ளனர்.

 

இதுதொடர்பாக பதிலளிக்க அரசு வக்கீல் அவகாசம் கோரிய நிலையில், இந்த விவகாரத்தை மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

 

இந்த வழக்கு தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் காவல் நிலைய கஸ்டடி மரணங்களுக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்