மாதவரம் ரசாயன கிடங்கில் தீ: இரவு முழுவதும் எரிய வாய்ப்பு என தகவல்

சனி, 29 பிப்ரவரி 2020 (21:13 IST)
மாதவரம் ரசாயன கிடங்கில் தீ
சென்னை மாதவரம் ரவுண்டானா அருகே உள்ள ரசாயனக் கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த தீயை அணைக்கும் பணியில் 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் மூலம் தீயை அணைக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது
 
மாதவரம் ரசாயன கிடங்கில் ஏற்பட்டுள்ள தீ இன்றிரவுக்குள் முழுமையாக அணைக்கப்படும் என்றும், மருந்து தயாரிப்பதற்கான ரசாயன பொருட்கள் கிடங்கில் இருந்ததா என உறுதியாக சொல்ல முடியவில்லை என்றும் சென்னை ஆட்சியர் தெரிவித்துள்ளார். எனவே இந்த தீ இன்று இரவு முழுவதும்  எரிய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
மாதவரத்தில் உள்ள ரசாயன கிடங்கு தீ விபத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வியாசர்பாடியில் இருந்து மாதவரம் வரை உள்ள சாலை ஒருவழி பாதையாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறையினர் அறிவித்துள்ளனர். மேலும் தீ அணைக்கும் பணியில் 26 வாகனங்கள், 500 தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், தீ பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் விரைவில் முழுமையாக அணைக்கப்படும் என டி.ஜி.பி.  சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்