இப்படி இருந்தா எப்படி காங்கிரஸை மதிப்பாங்க? – நிர்வாகிகளை கண்டித்த கே.எஸ்.அழகிரி!

திங்கள், 3 ஆகஸ்ட் 2020 (08:54 IST)
சமீபத்தில் மத்திய அரசின் கல்வி கொள்கைக்கு ஆதரவாக குஷ்பூ பதிவிட்ட நிலையில் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய கே.எஸ்.அழகிரி கண்டிப்பாக பேசியுள்ளார்.

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கு எதிராக காங்கிரஸார் கருத்து தெரிவித்து வரும் நிலையில் காங்கிரஸை சேர்ந்த குஷ்பூ ஆதரவாக பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் சமீபத்தில் தமிழக காங்கிரஸின் நிர்வாகிகள் குழு சந்திப்பு காணொளி மூலமாக நடைபெற்றுள்ளது. அதில் பேசிய கே.எஸ்.அழகிரி தமிழகத்தில் காங்கிரஸ் நிலை குறித்து கவலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள அவர் “காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் இரண்டு பிரதான பிரச்சினைகள் உள்ளது. முதலாவதாக கட்சிக்கு வலிமையான அமைப்போ, பரப்புரை செய்கிற சக்தியோ இல்லை. காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் நிறைய படிக்க வேண்டும். காங்கிரஸ் சண்டை போடும் கட்சியல்ல, கருத்தியல் நிறைந்த கட்சி என்பதை வெளிப்படுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.

மேலும் கட்சியில் உள்ள அனைவரும் கொள்கைரீதியாக பேசும்போது ஒரே மாதிரியாக பேச வேண்டும். அவரவர் விருப்பத்துக்கு ஏற்றார் போல பேசினால் மக்களிடையே காங்கிரஸ் மீதான நம்பிக்கைதான் குறையும். காங்கிரஸின் வலிமை தலைவர் வரும்போது கூடவே வருபவர்கள் அல்ல, கட்சியின் பாமர தொண்டர்கள்தான்! காங்கிரஸார் அனைவரும் தங்கள் வீடுகளில் காங்கிரஸ் கொடியை பறக்க விட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்