இனிமேல் நான் எந்த கட்சியும் கிடையாது..! – எதிர்பார்ப்பில் ஆப்பு வைத்த கு.க.செல்வம்

வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (10:58 IST)
திமுகவிலிருந்து எம்.எல்.ஏ கு.க.செல்வம் நீக்கப்பட்டதால் அவர் பாஜகவில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் எந்த கட்சியிலும் இணைய போவதில்லை என கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ கு.க.செல்வம் டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்தித்ததால் திமுகவின் முக்கியமான பதவிகளிலிருந்து நீக்கப்பட்டார். திமுக அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படும் முன்னர் அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால் அவரது விளக்கம் திருப்திகரமானதாக இல்லை என திமுக தலைமை கு.க.செல்வத்தை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியது.

இடையே ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவின்போது கு.க.செல்வம் பாஜக சென்னை அலுவலகம் சென்று வந்ததால் அடுத்து அவர் பாஜகவில் இணைவார் என்றும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. முன்னதாக கு.க.செல்வம் அதிமுகவில் இருந்தவர் என்பதால் மீண்டும் அதிமுக செல்ல வாய்ப்பிருப்பதாகவும் பேசிக் கொள்ளப்பட்டது.

ஆனால் இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் உடைத்து தனது கருத்தை முன் வைத்துள்ளார் கு.க.செல்வம். அதில் அவர் தான் எந்த கட்சியிலும் இனி இணைய போவதில்லை என்றும், கட்சி சாரா எம்.எல்.ஏவாக தனது பணியை தொடர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்