மெரீனாவில் காட்டிய அக்கறையை இதில் ஏன் காட்டவில்லை: கனிமொழி

வெள்ளி, 10 ஆகஸ்ட் 2018 (22:14 IST)
மெரினாவில் கருணாநிதி நினைவிடம் அமைக்க இடமில்லை என்று காட்டிய அக்கறையை ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி ஏன் காட்டவில்லை என்று திமுக எம்பி கனிமொழி தனது டுவிட்டர் பக்கத்தில் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
 
வேதாந்தா நிறுவனம், அதன் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையினை திறந்து நிர்வாக பணிகளை மேற்கொள்ளலாம் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 22 மே அன்று 13 பேர் கொல்லப்பட்ட பிறகு, தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டது. 
 
வேதாந்தா இந்த தடையை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் தமிழக அரசின் சார்பில், மூத்த வழக்கறிஞர் சிஎஸ்.வைத்தியநாதன் ஆஜரானார். வேதாந்தா போன்ற பெரிய நிறுவனத்தை எதிர்த்து வழக்காடுகையில், முதல் நாளே போதுமான கலந்தாலோசனைகளை மேற்கொண்டிருக்க வேண்டும்.
 
ஆனால், இதற்கான ஆலோசனை, வழக்கு 10.30க்கு துவங்க இருந்த நிலையில், அரை மணி நேரம் முன்னதாக 10 மணிக்கு நடைபெற்றுள்ளது. ஏன் தாமதம் என்றால், சிஎஸ்.வைத்தியநாதன், தலைவர் கலைஞருக்கு மெரினாவில் இடம் தரக் கூடாது என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டிருந்தார்.
 
கலைஞருக்கு இடம் தரக் கூடாது என்பதில் அத்தனை முனைப்பு காட்டிய எடப்பாடி பழனிச்சாமி, அந்த அக்கறையை ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதில் காட்டியிருந்தால், இத்தோல்வி நிகழ்ந்திருக்காது. எடப்பாடி பழனிச்சாமி, வரலாறு காணாத வகையில் தமிழகத்தின் நிர்வாகத்தின் தகுதியை குலைத்துக் கொண்டிருக்கிறார்
 
இவ்வாறு கனிமொழி எம்பி கூறியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்