பால்கனி அரசாங்கம்: மோடி அரசுக்கு கமல்ஹாசன் வைத்த புதிய பெயர்

புதன், 15 ஏப்ரல் 2020 (07:45 IST)
பிரதமர் மோடி சமீபத்தில் டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பால்கனியில் நின்று கைதட்ட சொன்னார். அதேபோல் கொரோனாவுக்கு எதிராக நாட்டு மக்கள் இருப்பதை உறுதி செய்ய பால்கனியில் அகல் விளக்குகளை ஏற்ற சொன்னார். இந்த நிலையில் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் மோடியின் அரசுக்கு பால்கனி அரசு என புதிய பெயரை வைத்து கிண்டலடித்துள்ளார்.
 
நேற்று மும்பையில் வெளி மாநிலங்களில் இருந்து தங்கியவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதுகுறித்து கமல்ஹாசன் காட்டமாக தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
 
பால்கனியில் உள்ள அனைவரும் தரையில் உள்ளவர்களை கவனிப்பது இல்லை. முதலில் டெல்லி, இப்போது மும்பை. புலம்பெயர்ந்தோர் நெருக்கடி என்பது வெடிகுண்டு மாதிரி. அது கொரோனாவை விட பெரிய ஆபத்தானது. அந்த நெருக்கடி விபரீதமாக மாறும் முன்பு அதைத் தடுக்க வேண்டும். பால்கனி அரசாங்கம் தரையில் என்ன நடக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்’என்று கூறியிருந்தார்.
 
கமல்ஹாசனின் இந்த டுவிட்டுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பதும் பெரும்பாலானோர் கமலின் இந்த டுவிட்டை ஆதரித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்