கமல், ரஜினி அரசியலில் ஜெயிக்க முடியாது: வாகை சந்திர்சேகர்

புதன், 14 பிப்ரவரி 2018 (10:32 IST)
கடந்த ஐம்பதாண்டுகளாக தமிழகத்தை திரையுலகை சேர்ந்தவர்கள்தான் ஆட்சி புரிந்து வந்துள்ளனர். அறிஞர் அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய நால்வருக்கும் திரைத்துறையில் நெருங்கிய தொடர்பு உண்டு. இந்த நிலையில் இதனையடுத்து தற்போது கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் கட்சி ஆரம்பித்து அரசியலில் குதிக்கவுள்ளனர். இருவரில் ஒருவர் அல்லது இருவரும் இணைந்து ஆட்சியை பிடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 40 ஆண்டுகளாக திரையுலகில் இருக்கும் நடிகரும், வேளச்சேரி தொகுதி எம்.எல்.ஏவுமான வாகை சந்திரசேகர் தூத்துக்குடியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசியபோது, 'நடிகர்கள் அரசியலுக்கு வந்து தனிக்கட்சி துவக்கி முதலமைச்சர் ஆகிவிட முடியாது. இதற்கு, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்தான் முன் உதாரணம் என கூறியுள்ளார்.

வாகை சந்திரசேகர் மேலும் இதுகுறித்து கூறியபோது, 'சினிமா துறையிலிருந்து இன்னொரு பெருந்துன்பம் வந்துகொண்டிருக்கிறது. வயது இருக்கும் வரை ஆடித் தீர்த்துவிட்டு, புகழையும் பணத்தையும் சம்பாதித்துவிட்டு, வயதான பிறகு அரசியலுக்கு வருகிறார்கள். நானும் சினிமாவில் 40 ஆண்டுகாலம் இருந்தவன் என்ற முறையில் சொல்கிறேன். கமலாக இருந்தாலும்  ரஜினியாக இருந்தாலும், அரசியலுக்கு வந்து தனிக்கட்சி துவங்கி முதலமைச்சர் ஆகிவிட முடியாது. நடிகர்கள் தனிக்கட்சி துவக்கி வெற்றிபெற்றுவிட முடியாது என்பதற்கு விஜயகாந்த்தான் முன் உதாரணம்' என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்