நான் இறந்து 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்தேன்: பேசுவது ஜெயலலிதாவின் ஆவி!

செவ்வாய், 28 பிப்ரவரி 2017 (15:54 IST)
ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி மரணடைந்ததாக அப்பல்லோ மருத்துவமனை அறிவித்தது. அதன் பின்னர் அவரது மரணம் குறித்து அதிகப்படியான சந்தேகங்கள், வதந்திகள், யூகங்கள் இன்றுவரை வந்துகொண்டிருக்கிறது.


 
 
ஜெயலலிதா இறந்த நிலையில் தான் அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை 75 நாட்கள் மருத்துவமனையில் இறந்த நிலையில் தான் வைத்திருந்தார்கள் என பல வதந்திகள் பரவியது.
 
இந்நிலையில் ஜெயலலிதாவின் ஆவி பேசியதாக சாமியார் ஒருவர் இதே கருத்தை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வீட்டுக்கு திருவாரூரை சேர்ந்த ஸ்ரீமகரிஷி என்ற சாமியார் வந்துள்ளார்.
 
ஜெயலலிதாவின் ஆவி தன்னிடம் பேசியதாகவும் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேச வேண்டும் என்றும் காத்திருந்த அந்த சாமியாரிடம் செய்தியாளர்கள் விசாரித்தனர். அப்போது அவர் கண்ணை மூடி ஜெயலலிதாவின் ஆவி தன் மீது இறங்கியிருப்பதாக கூறி ஆவி போல பேச ஆரம்பித்தார்.
 
ஜெயலலிதாவின் ஆவி என அவர் பேசியதாவது, நான் 75 நாட்கள் இறந்த நிலையில் தான் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தேன். ஓபிஎஸ்-ம், தீபாவும் இணைந்து எனது இயக்கத்தை வழி நடத்த வேண்டும். இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற வேண்டும்.
 
ஓபிஎஸ் என் அன்புக்கு பாத்தியமானவர், அவருக்கு துணையாக இருப்பேன். தீபாவின் கனவிலும் பேச நினைத்தேன். ஆனால் அவரது கணவரை சந்தித்து பேசினேன். அவரிடம் எல்லா விஷயங்களையும் கூறியுள்ளேன் என தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்