ஜெயலலிதா விரும்பிய உணவை சாப்பிடுகிறார்: நான்கு நாட்களில் அறிக்கை?

வெள்ளி, 4 நவம்பர் 2016 (11:14 IST)
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா விரும்பிய உணவை உண்ண ஆரம்பித்துள்ளதாகவும், இதுகுறித்தான அறிக்கை இன்னும் 4 நாட்களில் வெளியாகும் எனவும் தகவல்கள் வருகின்றன.


 
 
கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா 40 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வருகிறார்.
 
அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. உணவு முதலியவற்றை குழாய் மூலமாக மூக்கு வழியாக செலுத்தி வந்தனர். இந்நிலையில் அவருக்கு பொருத்தப்பட்டிருந்த செயற்கை சுவாச கருவிகள் அகற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
எம்டிசிசியூ வார்டில் இருந்த ஜெயலலிதா தற்போது சாதரண வார்டில் உள்ளார் எனவும், குழாய் மூலமாக செலுத்தப்பட்ட உணவு நிறுத்தப்பட்டு விரும்பிய உணவை இயல்பான முறையில் சாப்பிட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்தான அப்பல்லோவின் அறிக்கை இன்னும் நான்கு நாட்களில் வெளியாகும் என கூறப்படுகிறது. கடைசியாக கடந்த 21-ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்