முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக, கடந்த 15ம் தேதி, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு இருந்ததாகவும், அது சரிசெய்யப்பட்டு விட்டதாகவும், விரைவில் அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவ நிர்வாகம் கூறியது.
ஆனால் அவர் இன்னும் வீட்டிற்கு திரும்பாமல், மருத்துவமனையிலேயே தங்கியிருந்து சிகிச்சை எடுத்து வருகிறார். இதனால் அவரது உடல்நிலை குறித்து வதந்திகள் பரவியது. அவர் வெளிநாட்டிற்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள இருக்கிறார் என்றும் கூறப்பட்டது. ஆனால், அதிமுக மற்றும் மருத்துவமனை தரப்பு அந்த செய்தியை மறுத்தது.
இந்நிலையில், இன்று அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகிறார் என்று ஒரு பிரபல வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், ஜெயலலிதா போயஸ்கார்டனில் போதிய ஓய்வு எடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும், அவருக்கு தேவையான மருத்துவ வசதிகளும் அங்கு தயார் நிலையில் இருப்பதால், எந்த நேரமும் அவர் போயஸ் கார்டனுக்கு திரும்புவார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.