டிசம்பர் 4ம் தேதியே ஜெயலலிதா இறந்துவிட்டார் - போட்டு உடைத்த திவாகரன்

புதன், 17 ஜனவரி 2018 (17:57 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த வருடம் டிசம்பர் 4ம் தேதி மாலையே இறந்து விட்டார் எனவும், அப்போலோ நிர்வாகம் தன்னை பாதுகாத்துக்கொள்ளவே ஒரு நாள் தாமதமாக செய்தி வெளியிட்டதாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெரிவித்துள்ளார்.

 
மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைபாடு காரணமாக கடந்த 2016ம் வருடம் செப்.22ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின் 75 நாட்கள் கழித்து சிகிச்சை பலனின்றி அவர் அதே வருடம் டிசம்பர் 5ம் தேதி மரணமடைந்தார். டிசம்பர் 5ம் தேதி இரவு அவர் இறந்து விட்டதாக அப்போலோ நிர்வாகம் செய்தி வெளியிட்டது. தற்போது ஜெ.வின் மரணம் தொடர்பான விசாரணை நடைப்பெற்று வருகிறது.

இந்த நிலையில், மன்னார்குடியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் விழாவில் கலந்து கொண்டு பேசிய சசிகலாவின் சகோதரர் திவாகரன் “ ஜெயலலிதா டிசம்பர் 4ம் தேதி மாலை 5.15 மணிக்கே இறந்து விட்டார். ஆனால், தமிழகத்தில் உள்ள அனைத்து அப்போலோ மருத்துவமனைகளின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள். அதன் பின்பே அவர் இறந்தது குறித்து அறிவிக்க முடியும் என அப்போலோ ரெட்டி தெரிவித்தார்” என திவாகரன் தெரிவித்தார்.
 
அரசு மற்றும் அப்போலோ நிர்வாகம் ஆகியவை தொடர்ந்து ஜெயலலிதா டிசம்பர் 5ம் தேதியே இறந்துவிட்டார் எனக் கூறிவந்த நிலையில், திவாகரன் கூறியுள்ள இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்