சூழ்ந்த மேகங்கள்; கொட்டும் கனமழை : தத்தளிக்கும் சென்னை

வெள்ளி, 3 நவம்பர் 2017 (09:51 IST)
கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை நகரம் தத்தளித்து வருகிறது.


 

 
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளது. இதில் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பகல் மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை மைய அறிக்கைகள் தெரிவித்தன.
 
குறிப்பாக சென்னையின் பல பகுதிகளில் பகலிலும், இரவிலும் கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு பெய்த கனமழையில் சென்னையில் உள்ள பள்ளமான பகுதிகள் நீரால் சூழப்பட்டுள்ளது. இதனால், அங்கு வசிக்கும் பொதுமக்கள் வெளியே வரமுடியாவில் அவதிக்குள்ளாகியுள்ளனர். 


 

 
குறிப்பாக முடிச்சூர், வேளச்சேரி, கோவிலம்பாக்கம் பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. முடிச்சூர் பகுதிக்கு இன்று காலை பேரிடர் மீட்பு குழு தற்போது விரைந்துள்ளது. மின்சாரம், குடிநீர் இன்று பொதுமக்கள் அங்கு அவதிப்பட்டு வருகின்றனர். அதேபோல், மெரினா கடற்கரை முழுவதும் மழை நீரில் மூழ்கியுள்ளது.  பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
 
சென்னையில் உள்ள பல சுரங்கப்பாதைகள் நீரில் மூழ்கியுள்ளது. எனவே, அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மோட்டார் பம்ப் வைத்து அங்கிருக்கும் மழை நீரை வெளியேற்றும் முயற்சியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், பள்ளமான பகுதிகளில் வசிக்கும் மக்களின் வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளது. ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள துணை முதல்வர் ஓ.பி.எஸ் வீட்டிலும் மழை நீர் புகுந்துள்ளது.


 

 
ஆபத்தான இடங்களில் வசித்து வந்த மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு உணவு, பால் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.
 
பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வானிலை அறிக்கை  நிலவரப்பாடி, சென்னையில் தற்போது மேகங்கள் திரட்சியாக சூழ்ந்துள்ளது. எனவே, இன்னும் அதிக அளவில் சென்னையில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
பயப்படாதீர்கள்..சென்னைக்கு மழை தேவை என வெதர்மேன் போன்றவர்கள் கூறி வருகின்றனர். 2015ம் ஆண்டு ஏற்பட்டது போல் மீண்டும் சென்னையில் பல பகுதிகள் மூழ்கும் அபாயம் ஏற்படுமா என பலர் பீதியடைந்துள்ளனர். அப்படி எதுவும் நடக்காது என வானிலை அதிகாரிகள் கூறி வருகின்றனர்.
 
பல இயற்கை பேரிடர்களை சந்தித்து அதிலிருந்து மீண்டு வந்தவர்கள் சென்னை வாசிகள்.  அவர்கள் எதையும் சந்திப்பார்கள்....

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்