தமிழகத்தில் மீண்டும் கனமழை - வானிலை மையம் தகவல்

திங்கள், 27 நவம்பர் 2017 (10:25 IST)
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் இன்று கனமழையும், சில இடங்களில் லேசான மழையும் பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


 
வடகிழக்கு பருவமலை காரணமாக தமிழகத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இம்மாத தொடக்கத்தில் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது. அதன் பின் அதன் வலு குறைந்து போனது. அந்நிலையில், கடந்த 24ம் தேதி வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் பல பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது.
 
இந்நிலையில், தமிழகத்தில் இன்னும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதில், தமிழகத்தின் கடலோர பகுதிகளான சென்னை, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும், வட தமிழகத்தின் உள் மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யும் எனவும், தென் தமிழகமான நெல்லை,கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இடைவெளி விட்டு மிதமான மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்