மத்தி மீன்கள் வரத்து அதிகரிப்பு- மீனவர்கள் மகிழ்ச்சி!

J.Durai

வியாழன், 30 மே 2024 (16:03 IST)
நாகை அடுத்த நாகூர் பட்டினச்சேரி  துறைமுகத்தில் மத்தி மீன்களின் வரத்து அதிகரிப்பால் மீன் பிரியர்கள் மற்றும் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில் நாள் ஒன்றுக்கு 10 முதல் 12 டன் அளவிலான மத்தி மீன்கள் லாரி மூலம் கேரளா ஆந்திரா உள்ள மாநிலங்களுக்கு ஏற்றுமதி சேர்க்கப்படுகிறது.
 
தமிழக கடலோர பகுதிகளில் அதிகளவு கிடைக்கும்  மத்தி மீன், கேரள மாநிலத்-திற்கு பெரும் அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
 
உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமாக தேவைப்படும்
புரதச்சத்து நிறைந்த மத்தி மீனை விரும்பி சாப்பிடுபவர்கள் அதிகம். 
இந்நிலையில் நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட  நாகூர் பட்டினச்சேரி, நம்பியார் நகர், கீச்சாங்குப்பம், கல்லார், செருதூர்  ஆகிய மீனவ கிராமங்களில் இருந்து மீனவர்கள் பைபர் மற்றும் நாட்டு படகுகள் மூலம் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர்.
 
அண்மையில் ஏற்பட்ட புயல் காரணமாக 10 நாட்களுக்கு மேலாக மீன் தொழில் முடங்கிய நிலையில் நாட்டுப்புற மீனவர்கள் கடந்த மூன்று தினங்களாக கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருகின்றனர்.குறிப்பாக நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற  மீனவர்களின் வலைகளில் அதிகளவில் மத்தி மீன்கள் சிக்கின.
வலையில் சிக்கிய மத்தி மீன்களை, படகில் குவித்துக் கொண்டு, மீனவர்கள் துறைமுகத்திற்கு திரும்பி வந்தனர்.10 முதல் 12 டன் கணக்கில் குவிந்திருந்த மத்தி மீன்களை வாங்க நுாற்றுக்கணக்கான வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் துறைமுகம் பகுதியில் திரண்டனர். 
 
ஒரு கிலோ மத்தி மீன் ரூபாய் 130-150 க்கு வரை விற்பனையாகிறது.
மத்தி மீன்களை வியாபாரிகள் வாங்கி கேரளா மற்றும் ஆந்திராவிற்கு லாரிகள் மூலம் அனுப்பி வருகின்றனர்.
 
இதுகுறித்து நாகூர் பட்டினச்சேரி பைபர் படகுகள் மீனவர் சங்க செயலாளர்
எஸ். தன்ராஜ் கூறியதாவது: 
 
நாகூர் பட்டினச்சேர்க்கை மீனவர் கிராமத்தில் மட்டும் சுமார் 600க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் உள்ளது. மீன்பிடி தடை காலம் அமலில் உள்ளதால் பைபர் படகு மீனவர்கள் மட்டும் 10 தினங்களுக்கு பிறகு கடந்த மூன்று தினங்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்கிறோம்.தற்போது மத்தி சீசன் என்பதால் அதிக அளவு மத்தி மீன் வரத்து உள்ளது.
மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் துறைமுக பகுதியில் உள்ள முகத்துவாரத்தை தூர்வாரி, ஏற்றுமதிக்கான கட்டமைப்பை அரசு மேம்படுத்தி தர வேண்டும் என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்