இல்லம் தேடி கல்வி திட்டம் - பிரச்சார குழு நீக்கம்: பின்னணி என்ன??

செவ்வாய், 21 டிசம்பர் 2021 (11:02 IST)
திருச்சியில் இயங்கி வந்த சர்மிளா சங்கர் தலைமையிலான இல்லம் தேடி கல்வி திட்டம் பிரச்சார குழு நீக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு. 

 
மாணவர்கள் கற்றல் இடைநிற்றலை தவிர்க்க இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்தப்படுவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார். இல்லம் தேடிக் கல்வி திட்டமானது திருச்சி உட்பட 12 மாவட்டங்களில் சோதனை முறையில் நடைமுறைப்படுத்தப்பட முடிவுசெய்யப்பட்டது. 
 
இந்நிலையில் இந்த திட்டத்திற்காக தன்னார்வலர்களை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டது. அதன்படி பெண்களுக்கு முன்னுரிமை வழங்கி, கல்வி சான்றிதழ்களை சரிபார்த்து, குழந்தைகளை கையாளும் திறன் உள்ளதா என சோதித்து தன்னார்வலர்களை தேர்வு செய்தனர். 
 
இந்த திட்டத்தை மக்கள் மத்தில் கொண்டு செல்லவும் மக்களுக்கு இதை பற்றி தெரிய வைக்கவும் பிரச்சார குழு ஒன்று நியமிக்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தில், இல்லம் தேடிக் கல்வி திட்டத்துக்காக 8 விழிப்புணர்வு பிரச்சாரக் குழுக்கள் நியமிக்கப்பட்டது. 
 
இதனிடையே திருச்சியில் இயங்கி வந்த சர்மிளா சங்கர் தலைமையில் குழுவின் நபர் ஒருவர் இல்லம் தேடிக் கல்வி விழிப்புணர்வு சட்டை அணிந்தவாறு அரசு மதுபானக் கடையில் மதுபானம் வாங்கிக்கொண்டு இல்லம் தேடிக் கல்வி பயண வாகனத்தில் ஏறும் காட்சி இணையத்தில் வைரலானது. 
 
இதனைத்தொடர்ந்து நெறிமுறைகளை மீறி நடந்து கொண்டதால் சர்மிளா சங்கர் தலைமையிலான குழு பிரச்சாரத்தில் இருந்து நீக்கப்படுவதாக பள்ளிக் கல்வி முதன்மைக் கல்வி அலுவலர் அதிரடியாக அறிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்