‘சாலையில் பள்ளம், சேதங்கள் இருப்பின் நம்ம சாலை’ செயலியில் பதிவேற்றலாம்- அமைச்சர் உதயநிதி

புதன், 1 நவம்பர் 2023 (17:35 IST)
நெடுஞ்சாலைத்துறை சார்பில் பல்வேறு சாலைத்திட்டப்பணிகளை தொடங்கி வைப்பதற்காக சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி மையத்துக்கு சென்ற  அமைச்சர் உதயநிதி, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு, மரக்கன்றுகள் நடுகிற திட்டத்தை இன்று தொடங்கி வைத்து, மரக்கன்றினை நட்டார். அதன்பின்னர்  தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிற மற்றும் பணிகள் முடிக்கப்பட்ட சாலைத்திட்டங்களின் மாதிரிகளை பார்த்து, அந்த சாலைகள் குறித்து அதிகாரிகள்  - அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

இதையடுத்து, ‘நம்ம சாலை’ செயலியின் பயன்பாட்டை சென்னையில் இன்று தொடங்கி வைத்தார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
 
''விபத்தில்லா தமிழ்நாடு’ என்ற முழக்கத்தை முன் வைத்து, நெடுஞ்சாலைத்துறை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள ‘நம்ம சாலை’ செயலியின் பயன்பாட்டை சென்னையில் இன்று தொடங்கி வைத்தோம்.
 
சாலையில் பள்ளம் உள்ளிட்ட சேதங்கள் இருப்பின், பொதுமக்களே அதனைப் புகைப்படம் எடுத்து ‘நம்ம சாலை’ செயலியில் பதிவேற்றலாம். அந்தப்பழுது, 24 முதல் 72 மணி நேரத்துக்குள் அரசு சார்பில் சரி செய்யப்படும்.
 
இதுமட்டுமன்றி, நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களை எளிதில் இணைக்கின்ற வகையில், Closed User Group மொபைல் எண் சேவையையும் தொடங்கி வைத்தோம்.
 
மேலும், சென்னை-கன்னியாகுமரி தொழிற்தட திட்டத்தின் கீழ் வரும் சாலைகள் உட்பட சுமார் ரூ.623 கோடி மதிப்பில், மேம்படுத்தப்பட்ட பல்வேறு சாலைகளை இன்று திறந்து வைத்தோம்.
 
இந்த புதிய தொழில்நுட்ப சேவைகளும் - சாலை வசதிகளும்,  தமிழ்நாட்டின் உட்கட்டமைப்புக்கு வலிமை சேர்க்கவுள்ளதில் மகிழ்ச்சி கொள்கிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்