மனைவியைக் கொன்று கணவனும் தற்கொலை – குடிப்பழக்கத்தால் சீரழிந்த குடும்பம் !

சனி, 10 ஆகஸ்ட் 2019 (12:11 IST)
சேலம் அருகே உள்ள கூட்டத்துப்பட்டியில் கணவன் மனைவிக்கு இடையே நடந்த சண்டை முற்றி மனைவியை கொன்றுவிட்டுக் கணவனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது.

சேலம் மாவட்டம் சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் செல்வம். இவரது மனைவி சுனிதா மற்றும் குழந்தைகள் பிரகதி மற்றும் நவ்தீப். பொருளாதார நெருக்கடி காரணமாக செல்வம் குடும்பத்தோடு மாமனாரின் ஊரான கூட்டத்துப்பட்டிக்கு இடம்பெயர்ந்துள்ளார். செல்வம் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர் என சொல்லப்படுகிறது.

இதனால் தனது சொந்த ஆட்டோவையும் இழந்து வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். செல்வத்தின் குடிப்பழக்கத்தால் அவருக்கும் சுனிதாவுக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. வழக்கம்போல நேற்று முன் தினம் இரவும் இருவரும் சண்டையிட்டுள்ளனர். இதில் கோபமான செல்வம் மண்வெட்டியால் சுனிதாவின் தலையில் தாக்கி அவரைக் கொன்றுள்ளார். அதன் பின்னர் மின்விசிறியில் தூக்குமாட்டித் தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதையடுத்துப் போலிஸா வந்து இரு உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். தம்பதியினரின் குழந்தைகள் இருவரும் இப்போது உறவினர்களுடன் உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்