தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், 2026 தேர்தலில் திமுக கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கூறிய நிலையில், “முதல்வர் பகல் கனவு காண்கிறார்” என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
மக்களைப் பற்றி அவருக்கு எந்தவித அக்கறையும் இல்லை என்றும், 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக தான் அபார வெற்றி பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், அதிமுக கூட்டணிக்கு இன்னும் சில கட்சிகள் வர இருக்கின்றன என்றும் அவர் கூறினார்.
அதிமுக ஆட்சியில் தான் 11 மருத்துவக் கல்லூரிகள், ஆறு சட்டக் கல்லூரிகள் கொண்டு வரப்பட்டதாகவும், அதிமுக கொண்டு வந்த திட்டங்களை முடக்கிய பெருமை திமுகவையே சேரும் என்றும் அவர் தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை கிடப்பில் போட்டு விட்டார்கள் என்றும், ஆனால் அதே நேரத்தில் சில திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி, தாங்கள் செயல்படுத்தியது போல் திமுகவினர் சித்தரித்து வருகிறார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
திமுக அங்கமாக இருந்த காங்கிரஸ் ஆட்சியில்தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது என்றும், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க தொடர்ந்து குரல் கொடுத்து வருவது அதிமுக மட்டுமே என்றும் அவர் தெரிவித்தார்.