’எந்நேரமும் போனும் கையுமாக இருந்த பசங்களா இவங்க!’ - மெய்சிலிர்த்த பாட்டி

வெள்ளி, 20 ஜனவரி 2017 (15:00 IST)
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக லட்சக்கணக்கான இளைஞர்களும், மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதைக் கண்ட வயதான மெய் சிலிர்த்து கண்ணீர் சிந்த பேசியுள்ளார்.


 

கோவை வ.உ.சி மைதானத்தில் பல்லாயிரக்கணக்கான கல்லூரி மாணவர்கள் திரண்டிருந்த கூட்டத்தின் நடுவே எழுபது வயதான பெண்மணி ஆவேசத்துடன் ஆட்சியாளர்களுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருந்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், நான் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவள். கோவைக்கு இடம்பெயர்ந்து பல ஆண்டுகளாக ஆகிவிட்டது. தற்போது சுண்டப்பாளையத்தில் வசித்து வருகிறேன். கடந்த ஒருவார காலமாக ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்று ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதை தொலைக்காட்சியில் பார்த்து மெய்சிலிர்த்து விட்டேன்.

நானும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்கிற உந்துதலில் இங்கு வந்தேன். எந்நேரமும் போனும் கையுமாக இருக்கிற இந்த காலத்து பசங்க ஜல்லிக்கட்டு பத்தி பேசறத கேட்கவே சந்தோசமா இருக்கு. இதுமட்டும் போதாது.

இவங்க போராட்டம் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் தெருவில இறங்கனும். இங்குள்ள பிள்ளைக படிக்கறதுக்கு லஞ்சம், திங்கறதுக்கு லஞ்சம், வேலை கிடைக்கிறதுக்கு லஞ்சம்னு அல்லாடுறாங்க.. இதெல்லாம் ஒழியுனும்னா இவங்க இந்த போராட்டத்தோடு நிக்காம அரசியல்ல இறங்கனும். அப்பத்தான் எல்லாம் சரியாகும்” என்று நம்பிக்கையோடு பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்