வாய்க்காலில் கவிழ்ந்த அரசு பேருந்து.. ஒருவர் பலி, 25க்கும் மேற்பட்டோர் படுகாயம்

Siva

புதன், 24 ஏப்ரல் 2024 (09:16 IST)
தஞ்சாவூர் அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அரசு பேருந்து வாய்க்காலில் விழுந்த விபத்தில் ஒருவர் பலியானதாகவும் 25க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகில் இருந்த வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்ததாகவும் இந்த பேருந்தில் பயணம் செய்த 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் சிகிச்சை பெற்று வருபவர்கள் யாருக்கும் பெரிய அளவில் ஆபத்து இல்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த விபத்து குறித்து அய்யம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வரும் நிலையில் ஓட்டுனரிடம் நடத்திய விசாரணையில் ஓட்டுநர் கட்டுப்பாட்டை பேருந்து இழந்ததாகவும் இதனால் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. வாய்க்காலில் அரசு பேருந்து விழுந்து விபத்துக்கு உள்ளாகி அதில் ஒருவர் பலியான சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்