வெடித்து சிதறிய பட்டாசு வாகனம்: தரைமட்டமான டீ கடை! – விழுப்புரம் அருகே அதிர்ச்சி சம்பவம்

திங்கள், 30 செப்டம்பர் 2019 (13:22 IST)
விழுப்புரம் அருகே பட்டாசு ஏற்றி சென்ற வாகனம் ஒன்று வெடித்து சிதறியதில் மூன்று பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டிவனத்திலிருந்து பட்டாசுகளை ஏற்றி கொண்டு வாகனம் ஒன்று புறப்பட்டுள்ளது. வடவனூர் அருகே நெடுஞ்சாலையில் வாகனத்தை நிறுத்திய டிரைவர், அங்குள்ள பஞ்சர் கடையில் ரேடியேட்டருக்கு ஊற்றுவதற்காக தண்ணீர் கேட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக வண்டியில் தீப்பற்றியுள்ளது. டிரைவர் சுதாரிக்கும் முன்னரே பயங்கரமான சத்தத்துடன் வாகனம் வெடித்தது. இதில் அதன் அருகிலிருந்த பஞ்சர் கடைக்காரர், டிரைவர் மற்றும் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பட்டாசு வாகனம் வெடித்த போது ஏற்பட்ட அதிர்வினால் சுமார் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள வீடுகளின் கதவுகள், ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின. அந்த வழியாக சில மீட்டர்கள் தூரத்துக்கு அப்பால் வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றின் கண்ணாடிகளும் நொறுங்கின. அருகே இருந்த ஒரு டீ கடை தரை மட்டமானது.

இதுகுறித்து தகவலறிந்து விரைந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இந்த திடீர் வெடிவிபத்து சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்