’கொடூரம்’ - செஞ்சி கோட்டையில் இருந்த இளம்பெண்ணின் பிணம் யார் என்று கண்டுபிடிக்கப்பட்டது

திங்கள், 15 ஆகஸ்ட் 2016 (15:24 IST)
புதுவை அருகே கோட்டக்குப்பத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் டுட்டோரியலில் பிளஸ்-2 படித்துவந்தார்.


 
கடந்த மாதம் 18-ந் தேதி அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் புதுவையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து அவர் திடீரென மாயமானார். இதை அடுத்து மாணவியின், தாயார், காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியதில், புதுவை  தனத்துமேட்டை சேர்ந்த விஜி (19) என்பவர் அடிக்கடி மாணவியின் செல்போனுக்கு பேசியது  தெரியவந்தது. மேலும், இருவரும் காதலித்து வந்ததும், மருத்துவமனையில் இருந்து காதலன் விஜியுடன் மாணவி சென்றதும் உறுதியானது. இதை அடுத்து, காவல்துறையினர் விஜியை தேடியபோது, அவர் புதுவை அரும்பார்த்தபுரம் அருகே பிடிப்பட்டார். பின்னர், அவரிடம் மாணவியை பற்றி  கேள்வி எழுப்பினர்.

இதற்கிடையே, கடந்த 23-ந் தேதி செஞ்சி கோட்டை கல்யாண மகாலுக்கு பின்னால் இளம்பெண் ஒருவர் அழுகியநிலையில் கை, கால்கள் கட்டப்பட்டு நிர்வாணநிலையில் பிணமாக கிடந்தார். அவர் யார் என்று தெரியாமல் இருந்தது. உடனே செஞ்சி காவல் நிலையத்துக்கு புதுவை காவல்துறையினர் விரைந்து சென்றனர். அவர்களுடன் மாணவியின் தாயாரும் சென்றார். செஞ்சி கோட்டையில் பிணமாக கிடந்த இளம்பெண்ணின் செருப்பு மற்றும் ஆடைகளை பார்த்து காவல்துறையினருடன் வந்த தாயார் கதரி அழுதார்.

‌இதை அடுத்து, காவல்துறையினர் நடத்திய விசாரணையில், விஜி கூறியதாவது “நானும், அப்பெண்ணும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தோம். கடந்த மாதம் 23-ந் தேதி நானும், ‌அவளும் செஞ்சி கோட்டைக்கு சென்றோம். அங்கு உல்லாசமாக இருந்தோம். அப்போது தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி ‌அவள் என்னை வற்புறுத்தினார். அதற்கு நான் மறுத்தேன். இதனால் எங்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் நான் ஆத்திரமடைந்து அவளின்,  கழுத்தை நெரித்து கொலை செய்தேன். அடையாளம் தெரியாமல் இருக்க அவரது முகத்தில் கல்லைபோட்டு சிதைத்தேன். பின்னர் அவரது கையையும், காலையும் கட்டி பாறை இடுக்கில் தள்ளிவிட்விட்டு அங்கிருந்து சென்றுவிட்டேன்.” என்றார்.

இதைத்தொடர்ந்து விஜியை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், புதுவைவில், விஜி மீது ஏற்கனவே பெரியகடை காவல்நிலையத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கு பதிவாகி இருப்பது தெரியவந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்