வளர்த்த நாய் உட்பட அனைவரும் விஷமருந்தி தற்கொலை! – பட்டுக்கோட்டையில் சோகம்

திங்கள், 24 ஆகஸ்ட் 2020 (14:47 IST)
பட்டுக்கோட்டை அருகே வளர்த்த நாய் உள்ளிட்ட அனைவருக்கும் விஷம் கொடுத்த பெண் தானும் விஷமருந்து குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பட்டுக்கோட்டை அருகே வளவன்புரத்தை சேர்ந்தவர் துளசி. இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் துளசி தனது குழந்தைகளுடன் தனது தாயார் சாந்தியின் வீட்டில் வசித்து வந்துள்ளார். காலை நீண்ட நேரமாக சாந்தியின் வீடு திறக்கப்படாமல் இருந்ததை கண்ட அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸ் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அங்கே துளசி, சாந்தி மற்றும் இரண்டு குழந்தைகளும் கூட இறந்து கிடந்துள்ளனர். நால்வரும் விஷம் அருந்தி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. மட்டுமல்லாமல் அவர்கள் வளர்த்த இரண்டு நாய்களும் விஷம் கொடுக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளன.

அவர்களது உடல்களை கைப்பற்றிய போலீஸார் உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். நாய்களின் உடல் கால்நடை மருத்துவமனைக்கு ஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ளது. குடும்பமே விஷமருந்தி இறந்ததற்கான காரணம் குறித்து தெரிய வரவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்