பணப் பட்டுவாடா தாறுமாறு - அரவக்குறிச்சி தொகுதிக்கு தேர்தல் மே 23

ஞாயிறு, 15 மே 2016 (09:16 IST)
பணம் பட்டுவாடா கடுமையாக நடப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையிலும், பணம் பறிமுதல் செய்யப்பட்டதன் பேரிலும் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் ஓட்டுப்பதிவை மே 23ஆம் தேதிக்கு தள்ளிவைத்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
 

 
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜியும், திமுக சார்பில் கே.சி.பழனிச்சாமியும், மக்கள் நலக் கூட்டணி சார்பாக மதிமுக வேட்பாளர் கோ.கலையரசனும் போட்டியிடுகிறார்கள்.
 
கடந்த சில தினங்களுக்கு முன்பு, திமுக வேட்பாளர் கே.சி.பழனிச்சாமியின் வீடு, கரூர் மற்றும் சென்னையில் உள்ள அவரது மகன் கே.சி.சி.சிவராமனின் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் சுமார் இரண்டரை கோடி ரூபாய்க்கு மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
 
அதேபோல, அதிமுக தரப்பிலும் ஏராளமான பணம் விநியோகிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும், அரவக்குறிச்சி தொகுதியில் பணமும், பரிசுப்பொருட்களும் வினியோகிக்கப்படுவதாக தேர்தல் கமிஷனுக்கு ஏராளமான புகார்கள் வந்துள்ளன.
 
கடந்த மாதம் 22ஆம் தேதி அன்புநாதன் என்பவரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.4 கோடியே 77 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தவிர, அந்த தொகுதியில் ரூபாய் நோட்டுகளை எண்ணும் மெஷின்கள், பதிவு செய்யப்படாத ஆம்புலன்சுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
 
இந்நிலையில், அரவக்குறிச்சி தொகுதியின் தேர்தல் தள்ளி வைக்கப்படுவதாகவும், அந்த தொகுதிக்கு மட்டும் மே 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. வாக்குகள் 25ஆம் தேதி புதன்கிழமை எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....

வெப்துனியாவைப் படிக்கவும்