ஆன்லைன் செயலி மூலம் விற்பனை செய்யப்பட்ட 60 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள்: காவல் துறை பறிமுதல்!

J.Durai

சனி, 7 செப்டம்பர் 2024 (11:48 IST)
கோவை மாநகரில் கல்லூரி பகுதிகளில் மாணவர்களை குறி வைத்து போதை மாத்திரை விற்பனை என்பது நடைபெற்று வந்தது. 
 
இது தொடர்பாக கண்காணித்து வந்த கோவை மாநகர காவல் துறை, குனியமுத்தூர் மற்றும் கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த இரண்டு நபர்களை பிடித்து கைது செய்தனர். அவர்கள் பெங்களூரில் இருந்து இந்த மாத்திரைகளை வாங்குவது விசாரணையில் தெரிய வந்தது. மேலும் போதைப் பொருளை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில், தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதில் இந்தியா மார்ட் என்ற செயலி மூலம், போதை மாத்திரை விற்பனை பகிரங்கமாக நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கோவை சைபர் கிரைம் காவல் துறையின் உதவியுடன், செயலியில் வியாபார தொடர்பு வைத்து இருந்த நபர் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த துளிப் பயோ டெக் ஃபார்மா என்ற நிறுவன உரிமையாளர் சச்சின் கார்க் என்ற நபர் என கண்டுபிடிக்கப்பட்டது
 
இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் அரியானா மாநிலம் விரைந்து சென்று, சச்சின் கார்கை கைது செய்து அவரிடம் இருந்த 20,000 மாத்திரைகளை பறிமுதல் செய்து கைது செய்தனர். இதன் மதிப்பு 60 லட்ச ரூபாய் இருக்கும் என  கோவை மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார். ஆகஸ்ட் மாதம் வரை கோவை மாநகரில் 158 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும், 2,598 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
 
போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் மீது 19 குண்டாஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளார்.
 
மாணவர்களிடம் போதை பழக்கத்தை தடுக்கும் விதமாக, அந்தந்த கல்லூரி நிர்வாகத்துடன் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது என்றார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்